இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.'பத்த வச்சிட்டீயே பரட்டை'ன்னு புலம்பினாலும் தப்பில்லை. மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. "அவர் எனக்கு கடவுள் போன்றவர்" என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினியின் இனப்பற்று குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம்.
உலக தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் ரஜினியின் இந்த பேச்சு குறித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது-
பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்தியில் திலீப்குமாரை வைத்தும் எடுத்தார். அந்த படத்தை திரையிடுவதற்கு பால்தாக்ரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வாசன், நாகிரெட்டி ஆகியோர் மும்பை சென்று எப்படியாவது வீரப்பாவை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினர். அப்போது தமிழ்நாட்டில் இந்தி படத்தை திரையிட்டால்தான் வீரப்பாவின் படம் மஹாராஷ்டிராவில் வெளியிடப்படும் என்று அவர்களை மிரட்டினார் தாக்கரே.
தனது படம் ஒடவேண்டும் என்பதற்காக என்ற சுயநலத்திற்காக பால்தாக்கரேவை கடவுள் என்று சொன்ன ரஜினி, இலங்கையில் படம் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை 'மகா கடவுள்' என்று சொல்வாரா என்று ஆவேசப்படுகிறார் ஜனார்த்தனன்.

No comments:
Post a Comment